ஜெயலலிதாவின் உறவினர் என்று சொல்லி.. என் உணர்ச்சிகளோடு விளையாடிவிட்டார் - நடிகை ஜாக்குலின் பரபரப்பு

ஜெயலலிதாவின் உறவினர் என்று சொல்லியும் பிரபல தொலைக்காட்சியின் உரிமையாளர் என்று சொல்லியும் தன் வாழ்க்கையில் விளையாடி விட்டார் என்று பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முறைகேடாக பெற்று தருவதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர். இவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
சிறையில் இருந்தபடியே தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாய் பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை, டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை .
அதில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் , நடிகை நோரா உள்ளிட்டவரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தது. இது குறித்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இடம் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தியது.
விசாரணையில் மினி கூப்பர் கார் ,விலை உயர்ந்த கடிகாரங்கள், காலனிகள், குதிரை உள்ளிட்ட 7 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சுகேஷ் சந்திரசேகர் தனக்கு பரிசளித்ததாக ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜாக்குலின் அளித்துள்ள வாக்குமூலம் தற்போது வெளியாகி இருக்கிறது. தனது உணர்ச்சிகளோடு விளையாடி தன் வாழ்க்கையை சுகேஷ் சந்திரசேகர் நரகமாக்கிவிட்டார் என்று ஜாக்குலின் சுகேஷ் குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும், மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் உறவினர் என்று தன்னை சொல்லியும் , சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல டிவியின் உரிமையாளர் என்றும் சொல்லி சுகேஷ் சந்திரசேகர் தன்னை ஏமாற்றி விட்டார்.
தனக்கு மிகப்பெரிய ரசிகர் என்று சொல்லி தன்னை தென்னிந்திய படங்களில் நடிக்க வைப்பதாகவும் ஏமாற்றி விட்டார் என்று கூறியிருக்கிறார். பிரபல டிவியின் உரிமையாளர் என்பதால் தென்னிந்தியாவில் பல படங்களை தான் தயாரிக்க இருப்பதாக சொல்லி, சேர்ந்து பல படங்கள் செய்யலாம் என்று தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்றும் சுகேஷ் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
தன்னைத் தவறாக வழி நடத்தி, தனது தொழிலையும் வாழ்வாதாரத்தையும் நாசமாக்கி விட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜாக்குலின். சுகேஷின் குற்ற பின்னணி தனக்கு தெரியாது என்றும், அவர் சிறைக்கு சென்ற பின்னர் தான் அவரது உண்மையான பெயர் சுரேஷ் சந்திரசேகர் என்பது தனக்கு தெரியும் என்றும் வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார் ஜாக்குலின்.