ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ இணைக்க முயற்சித்து வருகிறேன்- சசிகலா
அதிமுக தொண்டர்களின் மனநிலையை சரியாக புரிந்து கொள்ளாததால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜக அலுவலக வாசலில் நின்று தேர்தலுக்கு கூட்டணி கேட்கிறார்கள் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்லூரியில் நடைபெற்ற நிறுவனர் தின கலை வார விழாவில் வி.கே. சசிகலா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “அதிமுக தொண்டர்களின் மனநிலையை சரியாக புரிந்து கொள்ளாததால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜக அலுவலக வாசலில் நின்று தேர்தலுக்கு கூட்டணி கேட்கிறார்கள். இரண்டு, மூன்று பேர் சேர்ந்து முடிவு எடுக்க முடியாது. அந்த மாதிரி எடுக்கிற கட்சி திமுக தான். அதிமுக தொண்டர்களின் முடிவு தான். நான் தனிப்பட்ட முடிவு எடுப்பதில்லை. இரட்டை சின்னத்தை யாராலும் அசைக்க முடியாது.
நான் உயிருடன் இருக்கும்வரை கட்சி பிளவுபட எந்த கட்டத்திற்கும் விடமாட்டேன். பொதுச்செயலாளர் என்ற பதவியோ, இதையெல்லாம் கொடுக்கக்கூடிய இடத்தில் யார் இருக்கிறார்கள் என்றால் அதிமுக தொண்டர்கள் தான் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பி.எஸ்.ஆகியோரை இணைக்க நான் அத்தனை முயற்சிகளை எடுத்து வருகிறேன். பாராளுமன்ற தேர்தல் வருவதற்குள் நிச்சயம் அதிமுக ஒன்றிணையும்” என தெரிவித்தார்.