அதிமுக பொது செயலாளர் பதவி- சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு

 
sasikala

அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வி.கே.சசிகலா  உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

Sasikala Not Questioned Yet in Kodanad Heist-Murder Case': TN Police to  Madras HC

அதிமுக பொது செயலலராக இருந்த  ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும்  தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக பொது குழுவில் அறிவிக்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக  பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவை கட்சி  பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை   ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொது செயலாளர்  இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அந்த கூட்டத்தில் நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் சென்னை மாவட்ட நான்காவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தன்னை பொதுச் செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம்  மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் கட்டுப்படுத்தும் எனவும்,  கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டுமென சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அ.ம.மு.க என்ற பெயரில் தனிக்கட்சி துவங்கியதால், டி.டி.வி தினகரன் இந்த வழக்கில் இருந்து பின்னர் விலகினார். இந்நிலையில் சசிகலாவின்  வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எப்பாடி பழனிச்சாமி, செம்மலை ஆகியோர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியதை உச்சநீதிமன்றம், டில்லி உயர்நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என  சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதிமுகவின் முகங்களாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை  தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவும்,  சசிகலா அதிமுகவிலேயே இல்லை என்கிறபோது கட்சியின் உறுப்பினர்கள் விபரம், சொத்து, வைப்பு நிதி, தலைமை அலுவலகத்தின் சாவி ஆகியவற்றை தன்னிடம் ஒப்படைக்கும் படி கோருவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சசிகலா தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி,  கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக மட்டுமே தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாகவும்,  கட்சியின்  மற்ற விவகாரங்களில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக வாதிடப்பட்டது. மேலும், உரிமையியல்  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளதாகக் கூறிய சசிகலா,  தனது வழக்கை நிராகிரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட  சென்னை 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை ஏற்று, சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார். சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.