பிரேசிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் - தமிழ்நாடு வீரர்கள் 6 பேர் தேர்வு!!

 
govt

பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள 24-ஆவது கோடைக்கால செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் 2022 போட்டியில் கலந்துகொள்ள  தமிழ்நாடு வீரர்கள் 6 பேர் தேர்வாகியுள்ளனர்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  சிவ. வி. மெய்யநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரேசில் நாட்டின் கேசியாஸ் டோசுல் (CAXIAS DOSUL - BRAZIL) என்ற நகரில் 24-ஆவது கோடைக்கால செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்-2022 போட்டிகள் (24* SUMMER DEAFLYMPICS - BRAZIL - 2022) வருகிற 2022 மே மாதம் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

tn

இப்போட்டியில் பங்கேற்க செல்லும் இந்திய அணியில் தமிழ்நாட்டை சார்ந்த நீச்சல் வீராங்கனை ஆர்.சினேகா, தடகள வீராங்கனை சமீகா பர்வீன் முஜிப், இறகுப்பந்து வீராங்கனை ஜெர்லின், டென்னிஸ் வீரர் பிரித்வி சேகர், தடகள வீரர்கள் மணிகண்டன் மற்றும் சுதன்ராஜேந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களுடன் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் திரு.மூர்த்தி, முதன்மை டென்னிஸ் பயிற்சியாளர் டாக்டர். ஸ்டாலின், நீச்சல் பயிற்சியாளர் திரு.ஸ்ரீதர் ஆகியோரும் பிரேசில் செல்கின்றனர். இப்போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வருகிற 29-ஆம் தேதி டெல்லியிலிருந்து புறப்பட்டு பிரேசில் செல்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 

tn
"போட்டியில் பங்கேற்க செல்லும் தமிழ்நாடு வீரர் - வீராங்கனைகள் அனைவரும் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பிலும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பிலும், அனைத்து தமிழ் மக்கள் சார்பிலும், விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் சார்பிலும் வாழ்த்துகிறேன்" என  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன்  தனது வாழ்த்துக்களையும்  தெரிவித்துள்ளார்.