எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம் உத்தரவு..
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பல பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் பொன்னி தலைமையில் விசாரணை குழுவை நியமித்து, எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் குறுத்து விசாராணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. பின்னர் முதல்கட்ட விசாரணை அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வழக்கை முடிக்க அனுமதிகோரி அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம் வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் புலன் விசாரணையை 10 வாரங்களில் முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த நவம்பரில் உத்தரவிட்டது. இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துது.. தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கின் விவரங்கள் எஸ்.பி வேலுமணியிடம் வழங்கப்படாமல் இருந்தது. அதேநேரம் இந்த வழக்கில் குற்றப்பத்திர்க்கை தயார் செய்யும் பணிகளும் நடைபெற்று வந்ததால், தமிழக அரசு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழக்கின் விவரங்களை எஸ்.பி.வேலுமணியிடம் வழங்குவோம் என தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.