மின்கட்டண உயர்வை திசை திருப்பவே சோதனை - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

 
SP velumani

மின்கட்டண உயர்வை திசை திருப்பவே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டதாக எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கிராமப்புறங்களில் எல்இடி விளக்குகளை மாற்றும் திட்டத்தில் ரூபாய் 500 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இரண்டு முறை சோதனை நடத்திய நிலையில், மூன்றாவது முறையாக இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டது. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

velumani house

இந்த சூழலில் எஸ்.பி .வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சோதனை நடத்துவதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று காலை அவரது வீட்டின் முன்பு திரளாக கூடினர்.  அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அங்கிருந்து செல்ல அவர்கள் மறுத்ததுடன் லஞ்ச ஒழிப்பு துறையினரை பணி செய்ய விடாமலும் தடுத்தனர். இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் வேலுமணி வீட்டின் அருகே போராடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்திய நிலையில் அதை எதிர்த்து போராடிய அம்மன் அர்ஜூனன், அருண்குமார், கந்தசாமி, தாமோதரன் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடுகளிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.  அதிகாலை முதல் நடத்தப்பட்ட சோதனை மாலையில் நிறைவடைந்தது. 

இந்நிலையில், மின்கட்டண உயர்வை திசை திருப்பவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். நெருங்கிய நண்பர்கள் என்று சிலர் வீட்டில் சோதனை மேற்கொண்டார்கள்; ஆனால் அவர்கள் யாரென்றே எனக்கு தெரியாது என்றார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் மின் கட்டண உயர்வை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்றும் சோதனையில் பெரிதாக ஒன்றும் கைப்பற்றப்படவில்லை எனவும் எஸ்.பி.வேலுமணி  கூறினார். .