குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000: திட்டத்தை தொடங்க தமிழக அரசு திட்டம்.. எப்போ தெரியுமா??

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை மார்ச் 3 ஆம் தேதி தொடங்க தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. பின்னர் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இத்திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. திமுகவின் வெற்று அறிவிப்பு, பொய்யான வாக்குறுதி என்றும் கூட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அதேநேரம் விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கலாமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவுக்கு உதவ துணைக் குழுவை தமிழக அரசு அமைத்தது.
நிதித்துறையின் கூடுதல் செயலாளர் பிரசாந்த் வடநரே உட்பட 4 பேர் அடங்கிய துணைக்குழுவையும் அமைத்தது. இந்த பொருளாதார நிபுணர் குழுவுடன் 2 நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார். அப்போது குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பேரிலேயே மார்ச் 3ம் தேதி குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.