சாலைப் பாதுகாப்பு வாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி

 
m.k.stalin

சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு  முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். 

accident

இதுகுறித்த முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11 முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. சாலையில் பயணிக்கும் ஒவ்வொருவரும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். 2030-ல் 'விபத்தில்லா தமிழ்நாடு” என்ற தொலைநோக்கினை அடையும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் அதிகமான சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம், சாலை விதிகள் குறித்த அறியாமையும், விதிகளை மதிக்கத் தவறும் மனப்போக்குமேயாகும். ஓட்டுநரின் உளவியல், போக்குவரத்து நெருக்கடி, வாகனம், சாலை வசதி, சுற்றுப்புறம் போன்றவை வாகன விபத்துகளுக்குக் காரணமாக இருந்தாலும், இவற்றில் ஓட்டுநரின் நடத்தை, அதாவது அவரின் உளவியலே விபத்துக்கான முதன்மைக் காரணமாக இருக்கிறது என எண்ணற்ற ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. சாலைகளில் வாகனம் ஓட்டும் போது சிவப்பு விளக்குகளை மீறி வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுதல், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல், அதிவேகப் பயணம், அதிலும் குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அலைபேசியில் பேசியபடி வாகளம் இயக்குதல் போன்றவை கடும் சாலை விதிமீறல்களாகும். இத்தகைய விதிமீறல்களைக் கட்டுப்படுத்த பல்வேறு சட்டங்கள் கொண்டு வந்தாலும், சாலை விதிகளை நடைமுறைப்படுத்தினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்போடுதான் விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் குறைக்க இயலும். தமிழ்நாட்டில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பெருமளவு குறைக்கும் பொருட்டு, இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மை காக்கும் 48 போன்ற சீர்மிகு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதோடு, பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்றவகையில் சாலை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உடனடி விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவை இயங்கி வருகின்றன.

stalin

சாலை விபத்துகளைக் குறைக்க உதவிடும் முக்கிய காரணி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வே ஆகும். பொது மக்களிடையே இந்த விழிப்புணர்வினை ஏற்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்; பாதசாரிகள் சாலையைப் பாதுகாப்பாக கடப்பதற்கு, நடைமேம்பாலங்கள் மற்றும் கரங்க நடைபாதைகளைப் பயன்படுத்திட விழிப்புணர்வு ஏற்படுத்துதல்; அனைத்துப் பள்ளிகளிலும் சாலைப் பாதுகாப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டு, மாணவ, மாணவியரிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவை அனைத்திற்கும் மேலாக, பொதுமக்கள் அனைவரும் சாலைப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, விபத்துகளைத் தவிர்த்து, பாதுகாப்பான பயனம் மேற்கொண்டு, ‘விபத்தில்லா தமிழ்நாடு' என்ற இலக்கினை அடைய ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.