தமிழகத்தில் அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு - ராமதாஸ் வரவேற்பு..

 
தமிழகத்தில்  அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு - ராமதாஸ் வரவேற்பு..


அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு புதிய சட்டம் உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர்  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. அனைத்து நிலைகளிலும் சமூகநீதியை காப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் அரசுத்துறை பதவி உயர்வில் வழங்கப்பட்ட ஓபிசி இட ஒதுக்கீடு செல்லாது என 02.09.2020 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பால் சமூகநீதிக்கு ஏற்பட்ட பாதிப்பை போக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என அப்போதே வலியுறுத்தியிருந்தேன்!

இட ஒதுக்கீடு

எனது இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதும், சமூகநீதி சார்ந்த வழக்குகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர் ரவிவர்மகுமார் வல்லுனர் குழுவின் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வரைவை, நீதிமன்ற ஆய்வுகளை தாங்கும் வகையில் வலிமையாக தயாரித்து  வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ம.க. முழு ஆதரவு  அளிக்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.