பிரியாவின் உடலை வாங்க மறுத்து போராட்டம் - நீண்ட நேரத்திற்கு பின் உடல் ஒப்படைப்பு

 
Protest

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடல் ஒப்படைக்கப்பட்டது. 

சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி பிரியா. இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த நிலையில், பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்து. இதனை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால் அவர்களின் தவறான சிகிச்சையால் பிரியாவின் கால் அழுகிய நிலையில், அதன் காரணமாக அவரது கால் அகற்றப்பட்டது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா (17) இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 
 

priya


சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார். இதேபோல் பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். இதனிடையே பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் மருத்துவமனை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பிரியா மரணம் தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் பெரவல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தந்தை தனது புகாரில் கூறியபடி இயற்கைக்கு மாறான மரணம் என கூறி பெரவல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது உடலை மாணவியின் பெற்றோரிடம் ஒப்படந்ததனர். அப்போது அங்கிருந்து  பிரியாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரது உடலை கொண்டு செல்லும் வாகனத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவரை கைது செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால் மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடல் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.