டாடா, பிர்லா வருமானத்தை விட ரெட் ஜெயின் மூவிஸ் அதிகம் சம்பாதிக்குது - அர்ஜூன் சம்பத்
இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கோட்டைமேடு உள்ளிட்டு ஐந்து பகுதிகளில் இந்து மக்கள் கட்சியின் கொடியேற்ற விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, வாரிசு துணிவு படங்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, துணிவு -வாரிசு இரண்டு படங்களும் ரெட் ஜெயின் மூவிஸ் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் வெளியிடப்பட்டிருக்கிறது. டாடா, பிர்லா போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் முதலீடு செய்து கிடைக்கும் வருமானத்தை விட அதிக அளவு வாரிசு, துணிவு படத்தின் மூலம் சம்பாதித்து இருக்கிறது . இதில் ரசிகர்கள் வாரிசு துணிவுக்காக யாரு பெரியவர்கள் என்று மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
அஜித் ரசிகர் ஒருவர் துணிவு பட முதல் காட்சியை கொண்டாடுவதற்காக சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்த அஜித் ரசிகர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அது தவறான கருத்து. உயிரிழந்த அஜித் ரசிகரின் குடும்பத்திற்கு ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றார்.
அவர் மேலும், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாலையில் ஒரு காட்சியை உருவாக்கி பணம் சம்பாதித்து இருக்கிறார்கள். அஜித் ,விஜய் சினிமா நடிகர்கள். அவர்களின் படங்களை ரசிகர்கள் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும். பொங்கல் பண்டிகை, தீபாவளி பண்டிகை என்று புதிய படங்களை வெளியிட்டு தமிழர்கள் அனைவரும் திரையரங்குக்கு செல்ல வேண்டும் என்றும், அல்லது டாஸ்மாக் கடைக்கு செல்ல வேண்டும் என்கிற இலக்கை வைத்து சம்பாதிக்கிறார்கள். கிறிஸ்தவ பண்டிகை இஸ்லாமிய பண்டிகைகளின் போது படங்கள் ரிலீஸ் ஆவதில்லை . தமிழர் பண்டிகையில் மட்டும் படங்கள் ரிலீஸ் ஆகிறது. இனிவரும் காலங்களில் தமிழர் பண்டிகைகளில் புதிய படங்கள் திரையிடக்கூடாது. இந்த சினிமா கலாச்சாரம் மாற வேண்டும் என்பது இந்துக்களின் கோரிக்கை என்று வலியுறுத்தினார்.