ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை..

 
மீனவர்கள்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி அடித்துள்ளது. மேலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜிபிஎஸ் வரைபடத்தையும் இலங்கை கடற்படை வெளியிட்டுள்ளது.  

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  பலத்த சூறைக்காற்று மற்றும் கடும் கடல் சீற்றம் காரணமாக கடந்த 5  நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.   நேற்று நிலைமை சீரானதை அடுத்து 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். 

மீனவர்கள்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்துள்ளனர்.   ஐந்து விசைப்படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசி எறிந்தும் அட்டூழியம் செய்துள்ளனர்.  இந்த பகுதிக்கு மீன் பிடிக்க வரக்கூடாது என்றும் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை  கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.  

மீனவர்கள்

இதனால் படகு ஒன்றுக்கு 50,000 ரூபாய் வரை இழப்புடன் ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதாக ஜிபிஎஸ் வரைபடத்தை இலங்கை கடற்படை வெளியிட்டுள்ளது.