மழைநீர் வடிகால் பள்ளங்களை உடனடியாக மூடி விபத்துகளை தவிர்க்க வேண்டும் - ராமதாஸ்

 
ramadoss

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பள்ளங்களை உடனடியாக மூடி விபத்துகளை தவிர்க்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 
இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சென்னையை அடுத்த மாங்காடு நகரத்தில், பணிகள் முடிக்கப்படாத மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து லட்சுமிபதி என்ற தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தோண்டப்பட்ட மழை நீர் வடிகால் பள்ளங்கள் மூடப்படாததால் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும். மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் அல்லது பள்ளங்கள் மூடப்பட வேண்டும் என தொடர்ந்து எச்சரித்தும் கூடஅலட்சியம் தொடர்வது சரியல்ல. பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகளில் தடுப்பரண்களை வைப்பது மட்டுமே பாதுகாப்பு அல்ல. உடனடியாக முடிக்க வாய்ப்புள்ள பணிகளை மழையில்லாத நாள்களில் நிறைவு செய்ய வேண்டும். அத்தகைய வாய்ப்பில்லாத மழைநீர் வடிகால் பள்ளங்களை உடனடியாக மூடி விபத்துகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.