அதிகரிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம் - போராட்டம் அறிவித்த ராமதாஸ்..

 
ramadoss

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை பழக்கத்தைக் கண்டித்து, வருகிற 30 ஆம் தேதி  மாநிலம் முழுவதும்  போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ்  அறிவித்துள்ளார்.  

சென்னை, கோவை என தமிழ்நாட்டில்  பரவலாக  கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாகவும்,  கல்லூரி மாணவர்களுக்கு சாக்லெட் வடிவில் போதைப்பொருள்  விநியோகம் செய்யப்படுவதாகவும்  குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.   போதைப்பொருள்  கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த   காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போதைப்பொருள்  கலாச்சாரம் அதிகரித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனம் ராமதாஸ், போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.   

drugs

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போதைக் கலாச்சாரத்தால் மிகப்பெரிய பேரழிவை நோக்கி தமிழ்நாடு பயணித்து கொண்டிக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதன் மூலமாக மட்டுமே போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாட்டில் கல்வி நிறுவன பகுதிகளில் தான் போதைப்பொருள் அதிகம் விற்பனையாகிறது.

போராட்டம் அறிவிப்பு

கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த மாணவர் ஒருவர் தடை செய்யப்பட்ட போதை ஊசிகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், உடல்நலம் பாதிக்ப்பட்டு சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். போதைக்கு அடிமையாகும் மாணவர்களும், இளைஞர்களும் மிகக்குறைந்த வயதிலேயே தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர். தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.