"சிங்களப் படையினரின் அத்துமீறலை இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது" - ராமதாஸ் ட்வீட்!!

 
PMK

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தனுஷ்கோடி அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரோக்யராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கரையூரை சேர்ந்த பாலமுருகன், அந்தோணி, அர்ஜூனன், தங்கப்பாண்டி, தங்கச்சிமடத்தை சேர்ந்த மடுகு பிச்சை, சிவகாமி நகரை சேர்ந்த ராஜா ஆகிய 6 பேர் கடலுக்கு சென்ற நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன், ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

fisher


இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வங்கக்கடலில் கோடியக்கரைக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது! சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது  செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும். இவர்களையும் சேர்த்து மொத்தம் 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறலை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது! கைது செய்யப்பட்ட மீனவர்களில் இதுவரை விடுதலை செய்யப்பட்ட 12 பேர் தவிர மீதமுள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.