ஏப்ரல் மாதத்தில் ரஜினி ரசிகர்களை சந்திக்கிறார் - சத்தியநாராயன ராவ் தகவல்..
படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்திருக்கிறார்.
சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சமூக அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. அதனை அவரது சகோதரர் சத்திய நாராயணராவ் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளார்களிடம் பேசிய அவர், இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், அவர் ரஜினிகாந்த் பெயரில் பல தர்மங்களை செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த அமைப்பு நன்றாக வளர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வதாக கூறினார்.
இந்த புனிதமான அறக்கட்டளை இன்றைக்கு நல்ல எண்ணத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்ய திறக்கப்பட்டுள்ளதாகவும், ரஜினி ஆசிர்வாதத்தில் இவை நடைபெற்று உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ரசிகர்களை சந்திப்பார் என்று கூறினார். ரசிகர்கள் சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அமைய வாய்ப்புள்ளதாகவும் சத்யநாராயணன் தெரிவித்தார். ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இறைவனிடம் தான் இருக்கிறது என்று குறிப்பிட்ட சத்தியநாராயண ராவ், ரஜினிகாந்த் ஆளுநரை அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையிலேயே சந்தித்தார் என்றும் விமர்சனத்திற்கு முற்றுபுள்ளி வைத்தார்.