எம்.எல்.எஸ் குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு..
விழுப்புரத்தில் உள்ள எம்.எல்.எஸ் குழுமத்திற்கு சொந்தமான கிரீன்ஸ் வணிக வளாகம், மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் 40க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரத்தில் மையப்பகுதியில் எம்.எல்.எஸ் குழுமத்தின் கீழ் கிரீன்ஸ் வணிக வளாகம், எம்.எல்.எஸ் ஜவுளி கடை, நகைக்கடை, ஜவுளிக் கடை, பைக் ஷோரூம், டிராக்டர் ஷோரூம், கல்வி நிறுவனங்கள், ஜெய்சங்கரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் கிரீன்ஸ் வணிக வளாகத்தில் மூன்று திரையரங்கம், துணிக் கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இந்த எம்.எல்.எஸ் குழுமமானது ரமேஷ், ராஜேஷ், பிரகாஷ், வெங்கடேஷ் ஆகிய 4 சகோதர்களுக்குச் சொந்தமானதாகும். இதில் மூத்த சகோதரர் ரமேஷ் இறந்துவிட்ட நிலையில், மற்ற 3 சகோதரர்களும் தொழிலை கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் இந்த வணிக வளாகத்தில் வரியைப்பு செய்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில், சென்னை மற்றும் புதுவையில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் காலை சுமார் 10.30 முதல் சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் கரூர் உள்ளிட்ட 10 இடங்களில், 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதல் ஏராளமான பொதுமக்கள் வணிக வளாகத்திற்கு வந்த நிலையில், அவர்களை வெளியேற்றி விட்டு கடைகளை பூட்டி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மையப்பகுதியில் உள்ள பிரபல எம்.எல்.எம் குழுமத்திற்குச் சொந்தமான கடைகளில் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..