பாஜக பிள்ளை பிடிக்கும் கட்சி - ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு

 
rs bharathi

பாஜக பிள்ளை பிடிக்கும் கட்சியாக செயல்படுகிறது எனவும், இந்த கட்சியுடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ள கூடாது எனவும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 
 
சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொது கூட்டம் ஓமலூரில் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில் உரையாற்றிய ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துபவர்கள், இந்தி தெரிந்தவர்கள் வட மாநிலங்களில் வேலை கிடைக்காமல் தமிழகத்தில் அதிகளவில் வேலைக்கு வந்திருப்பதை எண்ணி பார்க்க வேண்டும். மற்ற மாநிலங்களில் அந்தந்த மொழிகள் சற்று அழிந்து வரும் நிலையில், அறிஞர் அண்ணா வகுத்த இருமொழி கொள்கை தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கிறது. இதனை பொறுத்து கொள்ள முடியாத மத்திய அரசு, தமிழகத்தில் இந்தியை திணிக்க முயல்கிறது.

rs

 பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் வரலாறு, திமுகவின் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார். அரசு அலுவலகங்களில் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகாரிகளாக வருவதற்கு காரணம் திமுக என்றும் உய்ரநீதிமன்றத்தில் பிராமணர்கள் அல்லாதவர்கள் நீதிபதிகளாக பணியாற்றுவதற்கு கலைஞர் தான் காரணம். இந்தியை திணிக்க முயற்சித்தால் ஒரு நாளும் தமிழகம் அனுமதிக்காது. பாஜக பிள்ளை பிடிக்கும் கட்சியாக செயல்படுகிறது. இந்த கட்சியுடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ள கூடாது. தமிழையும், தமிழ்நாட்டையும் காப்பற்றும் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.