2021 அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் வென்ற வீரருக்கு இந்தாண்டு கார் பரிசு வழங்கிய ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பு பரிசாக கார் வென்ற மாடுபிடி வீரருக்கு ஜல்லிக்கட்டு கமிட்டி கார் பரிசு கொடுக்காதால் நீதிமன்றம் கமிட்டி தலைவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று அந்த பரிசினை வழங்கினார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் அதிக காளைகளை பிடித்த மாடுபிடி வீரருக்கு அப்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் சார்பில் கார் பரிசாக வழங்கப்படும் என அலங்காநல்லூர் ஜல்லிகட்டு கமிட்டி அறிவித்தது. இதனையடுத்து 2021ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் விராட்டிபத்து பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் 12 காளைகளை பிடித்து முதலிடம் பெற்றார். ஆனால் ஆள்மாறாட்ட புகார், பனியன் மாற்றி போட்டியில் பங்குபெற்றதாக கூறி அவருக்கு பரிசு வழங்காமல் கமிட்டி நிர்வாகம் நிறுத்திவைத்தது.
இதனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கண்ணன் வழக்கு தொடர்ந்தார், விசாரணையில் கண்ணனுக்கு கார் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 2021 ஆம் ஆண்டு விழா கமிட்டி கார் பரிசை வழங்காமல் இழுத்தடித்தது. இது தொடர்பாக கண்ணன் மீண்டும் நீதிமன்றத்தை நாடவே நீதிமன்றம் அப்போதைய ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தரராஜன் என்பவர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனால் இன்று உடனடியாக அதிமுக முன்னால் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மாருதி ஆல்டோ கார் மாடுபிடி வீரரான கண்ணனுக்கு பரிசாக வழங்கப்பட்டது.