ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முறைகேடு செய்தார் - புகழேந்தி குற்றச்சாட்டு

 
Pugazhendhi

எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக இருந்த போது, சென்னையில் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், எம்.எல்.ஏக்களும் முறைகேடு செய்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதராவாளரான புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.  
 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  தங்கமணியும், வேலுமணியும் எடப்பாடி பழனிசாமியை இயக்குவதில் பின்புலமாக உள்ளனர். தங்கமணிக்கு முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் அவரது விருப்பு வெறுப்பு காரணமாக 4 தொகுதிகளை அ.தி.மு.க. இழந்தது. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இரட்டை இலை சின்னம் இல்லாமல் தங்கமணி தேர்தலில் நின்று வெற்றி பெற முடியுமா? ஓ.பி.எஸ். தனக்கு பதவி வேண்டும் என்று யாரிடமும் கேட்கவில்லை. ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு மந்திரி பதவி தருவதாக தங்கமணி பேசியுள்ளார். பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு இல்லாத அதிகாரமா? இவர்கள் யார் மந்திரி பதவி தருவதற்கு? இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? பிரிந்து இருக்கின்ற அ.தி.மு.க.வினர் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் இணைந்து செயல்பட்டு அ.தி.மு.க.வை வலுப்படுத்த ஓ.பி.எஸ். தயாராக உள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் சில முக்கிய புள்ளிகள் கூடிய விரைவில் பா.ஜ.க.வில் சேர தயாராக உள்ளனர்.    

Pugazhendi

சென்னைக்கு 954 கி.மீ. நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைத்து தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அப்போது அவர் இனி சென்னையில் தண்ணீர் தேங்காது என்று கூறினார். ஆனால் தற்போது பெய்து வரும் மழையால் சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், எம்.எல்.ஏக்களும் முறைகேடு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.