மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியை அரசு தொடர்ந்து நடத்த வேண்டும் - புதுவை எம்.எல்.ஏ கோரிக்கை..
மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியை அரசு தொடர்ந்து தடையின்றி நடத்த வேண்டும் என புதுவை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுவை அரசு பிப்மேட் மூலம் 5 தொழில்நுட்ப கல்லூரிகளை இயக்கி வருகிறது. இதில் புதுவை லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் கொரோனா பரவலால் மாணவிகள் சேர்க்கை குறைந்தது. இதை காரணம் காட்டி கல்லூரியை மூடி பொறியியல் கல்லூரியாக மாற்ற அரசு முயற்சிக்கிறது. இந்த ஆண்டு மாணவிகள் சேர்க்கையை நிறுத்தி வைத்துள்ளது. இது தவறான முடிவாகும்.
கொரோனா பரவல், மாணவர் பஸ் நிறுத்தம் போன்ற காரணத்தால் மாணவிகள் சேர்க்கை குறைந்துள்ளது. மக்கள் தொகை குறைவாக உள்ள மாகி, ஏனாம், காரைக்காலில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. 23 தொகுதிகளை உள்ளடக்கிய புதுவையில் மாணவி களின் தொழில்கல்விக்கு ஒரே கல்லூரிதான் உள்ளது. இதையும் மூட நினைப்பது மிகவும் வேதனைக்குரியது. எனவே மகளிர் தொழில்நுட்ப கல்லூரியை தொடர்ந்து தடையின்றி அரசு நடத்த வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.