துணை வேந்தரைக் கண்டித்து போராட்டம் .. விடைத்தாள் திருத்துவதை புறக்கணித்த ஆசிரியர்கள் - பெரியார் பல்கலை.யில் பரபரப்பு..
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை கண்டித்து, தேர்வுத்தாள் திருத்தும் பணியை நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரும், வேதியியல் துறைத் தலைவருமான கோபி மீது, ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு இணைந்து பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம் நடத்தினர். பின்னர் அனுமதியின் பேரில் பல்கலைக்கழக துணை வேந்தரை சந்தித்து மனு அளிக்க சென்ற நிலையில், அவர் அவர்களை சந்திக்காமல் வெளியே சென்றுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் ஓமலூர் தாசில்தார் வல்லமுனியப்பன் ஆகியோர் துணை வேந்தர் ஜெகநாதனை சந்தித்து மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர். இதனிடையே நேற்று முதல் ஆசிரியர்கள் பல்கலைக்கழக தேர்வுத்தாள்களை திருத்தும் பணியை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்களை மதிக்காத துணை வேந்தரின் செயலை கண்டித்தும், ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், இரண்டாம் பருவத்தேர்வு தாள்களை திருத்தும் பணிகளை நிறுத்தியுள்ளனர். இதனால் உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் தகுதியில்லாதவர்களை கொண்டு தேர்வுத்தாள் திருத்தும் பணியை, பல்கலைக்கழகம் கைவிட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யும்போது மாணவர்களின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில பொதுசெயலாளரும், பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கிருஷ்ணராஜ், முறையாக ஒருங்கிணைப்பு குழுவை அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.