ஈஷாவை அரசுடைமையாக்கக்கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

 
protest

தமிழ்நாடு அரசு, ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் நடக்கும் மர்ம மரணங்கள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழர்களிடையே ஓங்கி உயர்ந்துள்ள சைவ நெறி ஆன்மிகத்திற்கு எதிராக, ஆரியமயமாக்கப்பட்ட வடவர் ஆன்மிகத்தைத் திணித்து, ஆகமநெறிகளுக்கு எதிரான கட்டுமானங்களைக் கடவுளின் பெயரால் எழுப்பி, ஆன்மிகத்தை வணிகமயமாக்கி இலாபம் ஈட்டும் கார்ப்பரேட் தொழிலாக மாற்றுவதோடு, சுற்றுச்சூழலுக்கும் கேடுவிளைவித்து வரும் ஈஷா மையத்தை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்க வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவை தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது.

இந்நிலையில், ஈஷா மையத்தில் பயிற்சிக்குச் சென்ற இளம்பெண் சுபசிறீ, மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் நடக்கும் மர்ம மரணங்கள் குறித்து தமிழ்நாடு அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும், ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று மாலை கோவை வடவள்ளியில், தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளம்பெண் சுபசிறீ மட்டுமின்றி, ஏற்கெனவே ஜக்கி வாசுவேவின் மனைவி விஜி, ஈஷாவின் முன்னாள் நிர்வாகி ஆடிட்டர் திலீப், பழங்குடியின இளைஞர் இராஜேஷ்குமார், விவசாயி ஓதிச்சாமி என ஈஷாவுடன் தொடர்புடைய பலர் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், இளம்பெண் சுபசிறீயின் மரணம் ஈஷா யோகா மையத்தின் மீதான ஐயத்தையே உறுதிப்படுத்தி இருப்பதாக தெய்வத் தமிழ்ப் பேரவை தெரிவித்துள்ளது.