கள்ளக்குறிச்சி வன்முறைக்கு மாணவியின் தாயாரே முழு காரணம் - தனியார் பள்ளி செயலாளர் குற்றச்சாட்டு..

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக நடந்த வன்முறைக்கு, மாணவியின் தாயாரே காரணம் எனத் சக்தி பள்ளியின் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் +2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது . ஆனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பள்ளி முன்பாக ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்தப் போராட்டம் கலவரமாக மாறியது.
இந்தச் சூழலில் தனியார் பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் , “மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக காவல்துறை விசாரணைக்குப் பள்ளி நிர்வாகம் தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். , இந்த விவகாரத்தில், எதனையும் மறைக்கவில்லை .
மேலும், மாணவியின் தாயார் தங்களைச் சந்திக்க வேண்டும் என்று கூறியதாகவும், நாக்கள் சந்திக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். காவல்துறை விசாரணை வளையத்திற்குள் இருப்பதால் மாணவியின் தாயாரைச் சந்திக்கவில்லை.. நாங்கள் எங்கும் ஓடி ஒளியவில்லை, இதுதான் உண்மை. அப்படி இருக்க ஏன் வன்முறையைத் தூண்ட வேண்டும்? ஏன் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டும்? தவறான இமேஜை பள்ளி மீது பரப்பியிருக்கிறார்கள். சக்தி பள்ளி 1998-ஆம் ஆண்டில் தொடங்கிப் பல தடைகளைக் கடந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி கொடுத்து வருகிறது. எங்களிடம் படித்த பல மாணவர்கள் மருத்துவர்களாகவும், இஞ்சினியர்களாகவும், அரசு வேலைகளிலும் இருக்கின்றனர்.
பள்ளியின் வாகனங்கள் என்ன செய்தது? மாணவர்கள் படிப்பதற்காக வைத்திருந்த புத்தகங்கள், நாற்காலி, மேசைகள் என்ன செய்தது ? வகுப்பறைகளைப், பொருட்களைச் சூறையாடியுள்ளனர். மாணவர்களின் சான்றிதழ்களை எரித்து நாசம் செய்துள்ளனர். எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்ப வரை படிக்கும் மாணவர்களின் ஆவணங்களை எரித்து விட்டது. வன்முறையாளர்கள் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை வீணடித்து விட்டனர். இந்த வன்முறைக்கும் சேதத்திற்கும் மாணவி ஸ்ரீமதியின் தாயார் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர் தான் பதில் சொல்ல வேண்டும். மாணவியின் செல்போன் எண்ணையும், அவரது தாயாரின் செல்போன் எண்ணையும் ஆய்வு செய்யுங்கள். அப்போது உண்மை என்னவென்று தெரிய வரும். மாணவி இறப்பிற்கான காரணம் அதில் தான் இருக்கிறது” என்று பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் இடையிடையே ஆண் குரல் ஒன்று கேட்பதும் குறிப்பிடத்தக்கது.