நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்..
நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் தேசிய அளவிலான முதலாவது நீர்வளத்துறை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டினை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தண்ணீர் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், நீர்நிலைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டால் வேளாண்துறை வேகமாக வளர்ச்சி பெறும் என்றும் கூறினார். நீர் ஆதாரங்களை வலுப்படுத்தி சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மாநில அரசுகள் தொடர்ந்து மத்திய அரசுடன் பணியாற்றி நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும், ஜியோசென்சிங், ஜியோமேப்பிங் போன்ற தொழில்நுட்பங்களை நீர் சேமிப்புத் துறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாட்டில் தண்ணீர் மிகவும் தேவைப்படும் துறைகள் என்றால் தொழில் மற்றும் விவசாயம் ஆகிய இரண்டு துறைகள் தான் என்றார். ஜல் ஜீவன் மிஷன் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் வழங்குவதற்கான முக்கிய வளர்ச்சி அளவுகோலாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், நமது அரசியலமைப்பு அமைப்பில், தண்ணீர் மாநிலங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதாக சுட்டிக்காட்டிய அவர், நீர் பாதுகாப்பிற்கான மாநிலங்களின் கூட்டு முயற்சிகள் இலக்குகளை அடைய நீண்ட தூரம் செல்லும் எனவும் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.