தனி நபருக்காக 250 வீடுகளை அகற்றதுவது எந்த வகையில் நியாயம்? - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர் பகுதியில் வீடுகளை அகற்றியதற்கு தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்த சாமி நகரில் சுமார் 259 வீடுகள் உள்ளது. பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் வீடுகளை இடிக்க உத்தரவிட்ட நிலையில், வீடுகளை இடிக்கும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்நிலையில் கோவிந்த சாமி நகரில் குடியிருப்புகளை அகற்றும் பகுதியை தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: கோவிந்த சாமி காலனியில் சுமார் 60 ஆண்டு காலமாக குடியிருந்த மக்களை அராஜக போக்கில் அகற்றி அனைத்து மக்களும் தெருவில் நிற்கும் அவல நிலைக்கு இந்த அரசு தள்ளிவிட்டது என்று குற்றம்சாட்டினார். மேலும், தனி நபருக்காக 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அகற்றதுவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பிய பிரேமலதா விஜயகாந்த், ஒரு வருடத்தில் திமுக அரசு என்ன சாதனையை செய்துள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் வாழ்கிற மக்கள் அகதிகளாக வாழ்கிற ஒரு நிலமை பார்க்கும் போது மிகவும் வேதனையளிக்கிறது என்று தெரிவித்த அவர், உண்மையான முதல்வராக இருந்தால் ஆர்.ஏ.புரம் மக்களை நேரில் சந்திக்க வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.