மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்..

 
KKSSR

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்துள்ள நிலையில் , எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிவித்துள்ளார்.  

 இதுதொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ * தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதைத் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள காரணத்தால், கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர்  கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை..

* பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு 17 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

* இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மிக கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

* தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.

* 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.

* மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்டங்களில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன.

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு விபரம்

* இன்று காலை 8.00 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது 20.13 அடி இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்திற்கு 256 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 912 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

* அதே போல, செங்குன்றம் (புழல்) ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி, தற்போது 18.09 அடியாக இருக்கிறது. தற்போது செங்குன்றம் ஏரிக்கு 189 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 677 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

* நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.