பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் அரசியல் தலையீடு இருக்காது!!
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் அரசியல் தலையீடு இருக்காது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை, நியாயவிலை கடை ஊழியர்கள் மட்டுமே அளிப்பர். இதில் அரசியல் தலையீடு இருக்காது. கரும்பு கொள்முதலில் விவசாயிகளுக்கு கரும்பு ஒன்றுக்கு ரூ.33 வழங்கப்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் மழைக்காலங்களில் நனைவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 108 தானியக்கிடங்குகள் மேற்கூரையுடன் கட்டப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜகவினர் அரசியல் காரணங்களுக்காக பொங்கலுக்கு தேங்காய் வழங்க சொல்லி போராடி வருகின்றனர். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ரேஷன் கடையில் ஊழியர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்கும் எண்ணம் இல்லை. ரேஷன் கடை நியமனங்களில் அதிமுக ஆட்சியில் இருந்த நிலையே தொடரும் என்று விளக்கமளித்தார்.