”பொங்கலோ பொங்கல்” - தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலம்

 
pongal

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அறுவடை திருநாளான பொங்கல் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும், உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இன்று தை முதல் நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, கரும்பு, மஞ்சள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை சூரியனுக்கு படைத்து பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

பொங்கல் பொங்கி வரும் போது "பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்" என கூறி மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் உற்சாகம் குறைந்து இருந்த இந்த பொங்கல் விழா தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில் களை கட்டியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.