ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சி போஸ்டர்கள் அகற்றம் - துணிவு, வாரிசு போஸ்டர்களும் அகற்றம்

 
erode

இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி, காலியிடம் ஏற்பட்ட சட்டமன்ற தொகுதியில் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனையடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்நிலையில், நேற்று திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. 

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன் காரணமாக அந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் அரசு சார்ந்த கல்வெட்டுகளும் கட்சி தலைவர்களின் சிலைகளும் மூடப்படுகின்றன. இதேபோல பொங்கலுக்கு வெளியான விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்களுக்காக ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களும் அகற்றப்படுகின்றன.