"காவல் நிலையங்களில் இரவில் விசாரிக்கக் கூடாது" - டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!!
கைதானவர்களை இரவு நேர விசாரணை கூடாது என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டாரனை கிராமத்தை சேர்ந்த தங்கமணி, சாராய விற்பனையில் ஈடுபடுவதாகக் கூறி, கடந்த 29ஆம் தேதி விசாரணைக்காக கலால் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 27ம் தேதி திருவண்ணாமலை கிளை சிறையில் தங்கமணி அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தங்கமணி உயிரிழந்தார். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தங்கமணியை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், அதன் காரணமாகவே அவர் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் கடந்த 18ஆம் தேதி கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி உடன் வந்ததாக சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை உதவி ஆய்வாளர் புகழும், பெருமாளும் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரில் விக்னேஷ் வலிப்பு வந்து இறந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து விசாரணை கைதிகள் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அனைத்து மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கு தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கைதானவர்களை மாலைக்குள் சிறையில் அடைக்க வேண்டும்; கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இரவு நேர கஸ்டடி விசாரணை கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருவண்ணாமலை விசாரணை கைதிகள் மரணமடைந்ததை தொடர்ந்து டிஜிபி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.