10,000 பேரை நீக்க திட்டமாம்.. ட்விட்டர், மெட்டா, அமேசான் வரிசையில் இணைந்த கூகுள்..
மற்ற முன்னணி நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனனும் அதிரடியாக 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு டெக் நிறுவனங்கள் செலவுகளை சமாளிப்பது, இழப்பை சரிசெய்வது போன்ற பல்வேறு காரணங்களால் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. தற்போது பொருளாதார சூழல் சரியில்லாத காரணத்தினால் செலவுகளைக் குறைப்பதற்காகவே ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் அந்த நிறுவனங்கள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அண்மையில் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை எலான் மஸ்க், கைப்பற்றிய உடனேயே ஆட்குறைப்பு நடவடிக்கையை தான் முதலில் செய்தார்... உயர் அதிகாரிகள் தொடங்கி ஊழியர்ஹள் வரை 50% தாண்டியது பணிநீக்கம்.. இதேபோல், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
அத்துடன் அமேசான், மெட்டா போன்ற நிறுவனங்களும் இதே காரணங்களுக்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கினர்.. இந்த சூழலில் கூகுள் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் பல மாதங்களாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் தொடர்ந்து எச்சரிக்கை மட்டுமே விடுத்து வந்தது. இந்த நிலையில், தற்போது சுந்தர் பிச்சை தலைமையிலான ஆல்பபெட் நிர்வாகம் சுமார் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதில் இருந்து பெருநிறுவனங்கள் பல இடையூறுகளை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் வருவாய் பெரிய அளவில் சரிந்து வருகிறது. இதைச் சமாளிக்கவே ட்விட்டர், அமேசான், நெட்பிளிக்ஸ், மைக்ரோசாஃப்ட், மெட்டா, போன்ற டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட்குறைப்பு செய்து வருகின்றன. மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் கூகுளின் தற்போதைய நிலைமை மோசமாக பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.