தெருவை காணவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
சேலம் மாநகரில் உள்ள தெரு ஒன்றை காணவில்லை என்று கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாகர் , சாமிநாதபுரம் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு மனைகளாக பிரிக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு விலைக்கு நிலம் வாங்கி , வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் 20 அடி அகலம் , 100 அடி நீளத்திற்கு கவுரம்மாள் காலனி பகுதியையும், வண்டிப்பேட்டை சாலையையும் இணைக்கும் பொதுப்பாதையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டி விட்டனர். தற்போது மீதமுள்ள பகுதியை சிலர் ஆளுங்கட்சியிர் எனக் கூறி ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த சாலை முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ளது . எனவே அந்த சாலையை மீட்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர். அப்போது சாலையை காணவில்லை என்று கூறி, பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள சாலையை மீட்டு தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவாக அளித்தனர்.
தொடர்ந்து அவர்கள் கூறும் போது, சாலை மீட்டுத் தர வலியுறுத்தி ஏற்கனவே புகார் அளித்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியதோடு, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பொது பாதையை மீட்டு தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.