தமிழக ஆளுநரை திரும்ப பெறக்கோரி ஜனாதிபதியிடம் மனு - அதிலுள்ள புகார்கள்
தமிழக ஆளுநர் ஆர்,என். ரவியை திரும்ப பெறக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதியிடம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எம்பிகள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் குற்றம் சாட்டி வந்தன. இதனால் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி .ஆர். பாலு தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. அந்த கடிதம் இன்று குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது .
மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முக்கிய புகாரினை முன் வைத்துள்ளனர். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ளதாக ஆளுநர் மீது அந்த மனுவில் புகார் கூறப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 31ஆம் தேதி வரை ஒப்புதல் தராமல் 20 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டுள்ளதாக புகார் கூறப்பட்டிருக்கிறது. மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுவதாகவும் ஆளுநர் ஆர். என். ரவி மீது புகார் கூறப்பட்டிருக்கிறது அந்த மனுவில்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கொள்கை அளவிலும் செயல்பாட்டு அளவில் எதிர்ப்பது அரசமைப்பு சட்டத்தை மீறுவது ஆகும். ஆளுநர் ஆர்.என். ரவி மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறார் என்று அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.