தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள் இன்று - சமூக நீதி நாளாக கொண்டாட்டம்!

 
periyar

தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படவுள்ளது
 

ttn

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஈரோடு வெங்கடநாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 17.09.1879ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். சாதியப் பாகுபாட்டினைக் கண்டு வெகுண்டெழுந்து சமூக நீதி காத்திடத் தொடர்ந்து போராடியவர் தந்தை பெரியார் அவர்கள். மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு, சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து போராடினார்.

1924ஆம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டமைக்கு எதிராகப் போராடி "வைக்கம் வீரர்" என்று அழைக்கப்பட்டார். இந்திய வரலாற்றிலேயே தீண்டாமையையும், சாதிக் கொடுமையையும் எதிர்த்து முதன் முதலாக நடைபெற்ற போராட்டம் என்ற சிறப்பை வைக்கம் போராட்டம் பெற்றது. பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியவர் தந்தை பெரியார் அவர்கள். சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் திகழ்வதற்கு வழிகாட்டி, தனது இறுதி மூச்சு வரை சுயமரியாதைக் கொள்கைக்காகவே வாழ்ந்தவர் தந்தை பெரியார் அவர்கள். தமிழ்நாட்டில் சமூக மாற்றத்தை உருவாக்கி, மக்களிடையே ஒற்றுமையை வளர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பட பெரும்பங்காற்றினார்.

yn

படிப்பறிவின் மூலமே பகுத்தறிந்து விழிப்புணர்வு பெறமுடியும் என்பதைத் தன் இலட்சியமாகக் கொண்டு, குடியரசு வார இதழைத் தொடங்கினார். சமுதாயத்தில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளை விரட்டிட சுயமரியாதை இயக்கத்தையும் தொடங்கியவர் தந்தை பெரியார். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் சுய மரியாதைக்கு உரிமை உடையவர் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். தமிழினத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்டு, சுய மரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி ஆகிய அடிப்படைக் கொள்கைகளால், இன்றும் மக்களின் மனங்களில் வாழ்ந்து வருகிறார் தந்தை பெரியார். 

இந்நிலையில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாளான இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும்,  சமூக நீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படவுள்ளது.