அரசு எஸ்இடிசி பஸ்களில் பார்சல் அனுப்பும் சேவை இன்று முதல் நடைமுறைக்கு வந்தது
தமிழக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமாக 1,110க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இவை நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கான சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் வகையில் பேருந்துகளில் உள்ள உபயோகப்படுத்தப்படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விடும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சமீபத்தில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ‘அரசு விரைவு போக்குவரத்து கழகமானது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் பேருந்துகளை இயக்குகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் பிரசித்தி பெற்ற பொருட்களை பிற ஊர்களுக்கு வியாபாரம் செய்திட ஏதுவாக, தற்போது லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில், குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவாக அனுப்பிட ஏதுவாக, பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர் தம் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும் வகையில், ஒரு மாதம் முழுவதும் பேருந்தில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை மற்றும் தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ள இத்திட்டம் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. பிரசித்தி பெற்ற திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோயில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களையும் இதன் மூலம் அனுப்பலாம்.
இதனை, சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொது மக்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ள அருகிலுள்ள தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். பொதுமக்கள் திருச்சி, மதுரை, சென்னை மார்க்கத்தில் தங்களது சுமைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது’ என்றார். இதன்படி இத்திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பார்சல்களை அரசு பஸ்களில் அனுப்புவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் பார்சல் அனுப்பும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
புறப்பாடு சேருதல் கீ.மீ நாள் வாடகை (80 கிலோ) மாத வாடகை (80 கிலோ)
திருச்சி சென்னை 210 6,300
மதுரை சென்னை 300 9,000
கோவை சென்னை 330 9,900
சேலம் சென்னை 210 6,300
நெல்லை சென்னை 390 11,700
தூத்துக்குடி சென்னை 390 11,700
செங்கோட்டை சென்னை 390 11,700
நாகர்கோவில் சென்னை 420 12,600
குமரி சென்னை 450 13,500
மார்த்தாண்டம் சென்னை 450 13,500
திண்டுக்கல் சென்னை 270 8,100
காரைக்குடி சென்னை 270 8,100
ஓசூர் சென்னை 210 6,300
நாகப்பட்டிணம் சென்னை 240 7,200