நிர்மலா சீதாராமன் கூறியதில் முழு உண்மையில்லை - பழனிவேல் தியாகராஜன்

 
ptr

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் உணவுப் பொருட்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரி  உயர்த்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் முழு உண்மையில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வு மற்றும் உணவு பொருட்கள் மீதான் ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்கள் மீதான விவாதத்தின் போது திமுக எம்.பிக்கள் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் திமுக அரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகவும், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் உணவுப் பொருட்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதாகவும் கூறினார். ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. 

Niramala sitharaman

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: சண்டிகரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றபோது, 56 பொருட்களுக்கு வரி தொடர்பாக பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. அந்த 56 பொருட்களுக்கான பரிந்துரைகளையும் ஒரே வாக்கில் ஆம் அல்லது இல்லை என்று தேர்வு செய்ய வேண்டும். அந்த சூழலில் 56 பொருட்களையும் கலந்துரையாடி தேர்ந்தெடுப்பதற்கு போதிய நேரமில்லை. மேலும், ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக கலந்துரையாடி தேர்வு செய்வதற்கான வழிவகையும் கொடுக்கவில்லை. ஆகையால் மொத்தமாக 56 பொருட்களுக்கும் ஒன்றாக சேர்த்து ஒப்புதல் அளித்தோம். இவ்வாறு கூறினார்.