டீக்கடைகாரரை அடித்து சித்ரவதை செய்த புகாரில் பழனி காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராக உத்தரவு

 
madurai high court

இளம் பெண்ணை கேலி செய்ததாக டீ வியாபாரம் செய்ததாக அப்பாவி இளைஞரை காவல்துறையினர் அடித்து  சித்திரவதை செய்த புகாரில் பழனி காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

court

பழனியை சேர்ந்த பவுசியா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் " நானும் எனது கணவர் முகமது அலி ஜின்னாவும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வசித்து வருகிறோம். மேலும் எனது கணவர் இருசக்கர வாகனத்தில் சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார் இதுவே எங்களது வாழ்வாதாரமா திகழ்ந்து இருக்கிறது. தினசரி காலை 5மணிக்கு சென்று இரவு 8 மணிக்கு வீடு திரும்புவார். ஆனால் கடந்த 8 தேதி வியாபாரத்திற்காக சென்று எனது கணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எனது கணவரின் நண்பர்கள் கொடுத்த தகவலின் படி எனது கணவர் பழனி காவல் துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்தது. 

நானும் எனது குடும்பத்தாரும் பழனி காவல் நிலையத்திற்கு சென்று பார்த்த பொழுது அவரை பார்க்க விடாமல் காவல்துறையினர் தடுத்தனர். அடுத்த நாள் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்பொழுது அவர் கால் உட்பட உடம்பு முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது. அவரிடம் நாங்கள் பேசிய பொழுது காவல்துறையினர் தன்னை கொடுமையாக தாக்கியதாகவும், பழனியில் டீ வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பெண் தவறுதலாக, நான் அவரை கேலி செய்ததாக கூறியதால், காவல் துறையினர் தன்னை கைது செய்ததாக தெரிவித்தார். இது குறித்து காவல்துறையிடம் நான் அதுபோன்று செய்யவில்லை என்றேன். ஆனால் அதனை கேட்க மறுத்து தொடர்ச்சியாக என்னை தாக்கியதாக தெரிவித்தார். தற்பொழுது எனது கணவர் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.

இதனால் பழனி சிறைச்சாலைக்கு கொண்டு சென்ற போது கொடூர காயங்கள் உள்ளதால் சிறையில் அனுமதிக்க மறுத்து விட்டனர். தற்போது எனது கணவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.எனவே எனது கணவரின் இந்த நிலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை என்பது எடுக்கப்பட வேண்டும். மேலும் எனது கணவருக்கு தனியார் மருத்துவமனையில் உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்

இந்த வழக்கு நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரரின் கணவருக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் எதிர் மனுதாரராக பழனி காவல் நிலைய ஆய்வாளரை இணைத்து இந்த வழக்கு குறித்த எஃப்ஐஆர் பதிவு மற்றும் தற்போதைய நிலை அறிக்கை உட்பட அனைத்தையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.