பாக். விரிகுடா பகுதிகளில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு..

 
பாக். விரிகுடா பகுதிகளில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும்  - தமிழக அரசு அறிவிப்பு..

இந்தியாவிலேயே முதன்முறையாக  தமிழக கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக். விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம்  அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அழிந்து வரக்கூடிய நிலையில் உள்ள அரிதான கடல்பசு இனத்தையும்,  அதன் வாழ்விடத்தையும் பாதுகாக்கும் பொருட்டு மன்னார் வளைகுடா, பாக். விரிகுடா  பகுதிகளில் கடற்பசு பாதுகாப்பகம்  அமைக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.  இதனை செயல்படுத்தும் விதமாக தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளை உள்ளடக்கிய பாக். விரிகுடாவில்  கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக பார்க் நீரிணையில் 446 சதுர கிலோமீட்டர் பரப்பளவில்  கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என  அறிவித்துள்ளது.

பாக். விரிகுடா பகுதிகளில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும்  - தமிழக அரசு அறிவிப்பு..

கடல் பசு இனங்களை பாதுகாப்பதனால் கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடல் புற்கள்பாதுகாக்கப்படும் எனவும்,  வளிமண்டல கார்பனை அதிக அளவில் நிலைப்படுத்த கடற்பசு பாதுகாப்பகம் உதவும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. கடல்புல் படுகைகள் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏதுவாக மேம்படுத்தப்படும் என்றும், தற்போது 240  கடல் பசுக்கள் மட்டுமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும்  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான கடல் பசுக்கள் தமிழ்நாட்டின் கடற் பகுதிகளிலேயே காணப்படுவதாகவும்,  கடல் பசுக்களின் வாழ்விடங்களை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டிய உடனடி தேவை எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. உள்ளூர் மீனவர்களுடன் ஆலோசனை நடத்தி கடல்பசு பாதுகாப்பகம்  அமைப்பது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.