'விளம்பரங்களில் மூழ்கியிருக்கும் விடியா அரசு...' - ஈபிஎஸ் கண்டனம்!!

 
paddy

ஆட்சியில் இருப்போர் மக்களின் துன்பத்தைப் போக்குவார்கள் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டது என்று ஈபிஎஸ் விமர்சித்துள்ளார். 

ep

இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கடந்த வியாழன் (28.7.2022) அன்றே, சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. அதே போல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது. நான் பலமுறை சுட்டிக்காட்டிய பிறகும், இந்த விடியா அரசின் உணவுத் துறை, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை சரியானபடி பாதுகாப்பாக குடோன்களில் வைக்காததாலும், தார்பாய்கள் கொண்டு மூடாததாலும், தற்போது பெய்த இரண்டு மூன்று நாட்கள் மழையிலேயே, சுமார் ஐந்தாயிரம் நெல் மூட்டைகளுக்கு மேல் பாதிக்கப்பட்டு, முளைவிட்டு இருந்தது பெரும்பாலான ஊடகங்களிலும், நாளிதழ்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகளாக வெளிவந்துள்ளன. ஏற்கெனவே, இந்திய உணவுக் கழகம், தமிழ் நாடு சிவில் சப்ளைஸ் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து, அவை அரவை ஆலைகளில் அரிசிகளாக மாற்றப்படும்போது, கரும் பழுப்பு நிறமாக மிகவும் தரம் குறைந்து கால்நடைகள் கூட உண்ணுவதற்கு லாயக்கற்றதாக உள்ளது என்று சான்று அளித்துள்ளனர்.

paddy

மதுரையில் கனமழை காரணமாக, ஆண்டாள்புரம், ஜெய்ஹிந்புரம், மேலபெருமாள் மேஸ்திரி வீதி ஆகிய இடங்களில் 4 பேர் பலியாகி உள்ளனர். கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் முன்கூட்டியே எச்சரித்திருந்தும், இந்த விடியா அரசும், வருவாய்த் துறையும், மாவட்ட நிர்வாகமும் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்காததால், இதுபோன்ற அவலங்கள் நிகழ்ந்துள்ளன.
மழைக் காலங்களில் அம்மாவின் ஆட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் பெரும் பாதிப்புகள் அப்போது தவிர்க்கப்பட்டன. மேலும், உடனடியாக அமைச்சர்கள் களத்தில் இறங்கி பாதிப்புகளை சீர்செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.குறிப்பாக, உயிரிழந்தவர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. தவிக்கும் அப்பாவி மக்களை வெள்ளத்தில் மூழ்க விட்டுவிட்டு, தன்னிலை மறந்து விளம்பரங்களில் தங்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் இந்த விடியா ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.ஆட்சியில் இருப்போர் மக்களின் துன்பத்தைப் போக்குவார்கள் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. தொடர் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அடலேறுகள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக உதவ வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்,அக்கறையை, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக அமைச்சர்களையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அனுப்பி வைத்து, மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.