நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வார்க்கிறது தமிழக அரசு - பி.ஆர்.பாண்டியன் கண்டனம்…
நெல் கொள்முதலை தமிழக அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை கைவிட்டு வருவதாக கூறினார். தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதை தனியாருக்கு அனுமதி வழங்கி திடீரென அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், 16 நவீன அரிசி ஆலைகளில் தனியார் மூலம் கொள்முதல் செய்து அவற்றை அரவை செய்து அரிசியாக அரசுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது ஏற்கத்தக்கது அல்ல என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் நெல் கொள்முதலை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது வெளிப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாகவே தமிழகம் முழுமையிலும் கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்ததாக குறிப்பிட்டார். தற்போது முதலமைச்சராக உள்ள மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்வதையே கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருவது வேதனை அளிப்பதாக கூறினார். இச்செயல் விவசாயிகளுக்கு மட்டுமின்றி கலைஞருக்கு செய்கிற துரோகமாகும் என்பதை உணர வேண்டும் எனவும், சட்டமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்காமல், அரசியல் கட்சிகள், விவசாயிகளுடைய கருத்தை கேட்டறியாமல் தன்னிச்சையாக மறைமுகமாக கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக கொள்முதலை கைவிட்டு இருப்பதை திரும்பப் பெற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
காவிரியின் உபரி நீர் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களை கடந்து கடலிலே கலக்கின்ற வரையிலும் வழியோர கிராமங்களில் வாழை, குறுவை சாகுபடி மேற்கொண்டிருந்த விவசாயிகள் உபரி நீர் சூழ்ந்து பயிர்கள் அழிவதை பார்த்து கண்ணீர் வடிப்பதாகவும், தற்போது குறுவைக்கான காப்பீடு திட்டத்தை தமிழக அரசு கைவிட்டு இருக்கும் நிலையில், அதற்கான மகசூல் இழப்பை கணக்கில் கொண்டு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணமாக வழங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார். பேரிடர் நிவாரண நிதி என்கிற பெயரில் விவசாயிகளுடைய உரிமையை பறிக்க முன்வரக்கூடாது என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுடைய நிலையை உணர்ந்து தமிழக முதலமைச்சர் விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.