2026-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமையும் - அன்புமணி பேச்சு

 
anbumani

2026ம் ஆண்டு பா.ம.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது குறித்தும், அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் வேலப்பன்சாவடியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:  இரண்டு திராவிட கட்சிகளும் அடுத்த தேர்தலை பற்றி தான் சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு அல்ல. மதுரவாயல்-துறைமுகம் மேம்பாலம் பணி நிலுவையில் உள்ளது. அதனை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும். இந்த சாலை இல்லாத காரணத்தால் இன்னும் தொழிற்சாலைகள் அதிக அளவில் இங்கு வர தயக்கம் காட்டுகின்றனர்.  மெட்ரோ ரெயில் திட்டத்தை ஆவடி வரை நீட்டிக்க வேண்டும். கொசஸ்தலை ஆற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கருணை உள்ளத்தோடு அரசு அணுக வேண்டும். 

2026-ல் பா.ம.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது குறித்தும், அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அரசு சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆளுநர் இன்னும் கையெழுத்து இடாமல் உள்ளார். இதற்கு முன்பு அவசர சட்டத்தை கொண்டு வந்தார்கள். அதற்கு ஆளுநர் கையெழுத்து இட்டார். தற்போது இந்த மசோதாவிற்கு கையெழுத்திட்டு முழுமையான சட்டமாக மாற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.