பிரதமர் மோடியின் பிறந்தநாள்.. தங்க மோதிரம் பரிசளிக்கும் தமிழக பாஜக..
பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க காசுகள் பரிசளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக பிரதமர் மோடியின் பிறந்தநாள் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாததால், பிரதமரின் பிறந்தநாளை காட்சியினர் விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதன்படி நாடு முழுவதும் இரண்டு வாரங்கள் ( 15 நாட்கள் ) வேற்றுமையில் ஒற்றுமை என்கிற பெயரில் சேவை வாரமாக கொண்டாட பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.
இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணிகள், மாரத்தான் போட்டிகள், மருத்துவ முகாம்கள், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழக பாஜக சார்பில், மாநிலம் முழுவதும் மாரத்தான் போட்டி, கபடி போட்டி, மாட்டு வண்டி போட்டி, கடற்கரையை சுத்தம் செய்யும் தூய்மை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. மாவட்டம் தோறும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பாஜக மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது.
அத்துடன் சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர். எஸ். ஆர். எம் அரசு மருத்துவமனையில் இன்று பிறக்க உள்ள குழந்தைகளுக்கு தலா 2 கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்க இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்திருக்கிறார். இந்த மருத்துவமனையில் இன்று 10 முதல் 15 குழைந்தைகள் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் , அப்பகுதி மக்களுக்கு 720 கிலோ மீன் விநியோகம் செய்யப்பட இருப்பதாகவும் பாஜக தெரிவித்திருக்கிறது.