பள்ளி வாகனத்தில் கூட்ட நெரிசல்- 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல்
பள்ளி வாகனத்தில் அதிக மாணவிகள் பயணம் செய்த போது நெரிசலில் சிக்கி மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதில், 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாலை பள்ளி முடிந்து மாணவிகளின் வ பள்ளிக்கு சொந்தமான வாகனங்கள் மூலமாக மாங்குளம், பொய்கைகரைபட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 130 க்கும் மேற்பட்ட மாணவிகளை அழைத்து சென்றுள்ளனர். ஒரே வாகனத்தி்ல் அழைத்துசென்றபோது கள்ளந்திரி அருகே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டதை அறிந்த பள்ளி வாகன ஓட்டுனர் அதே பகுதியில் உள்ள சந்து ஒன்றுக்குள் பள்ளி வாகனத்தை நீண்ட நேரமாக நிறுத்தியதாக கூறப்படுகிறது.இதனால் மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.இதில் 4 மாணவிகள் மயக்கமடைந்தனர்.
இதனையடுத்து கள்ளந்திரி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள் நால்வரும் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் தகவல் அளித்துள்ளார்.