கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
பிரபல திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்தியாவின் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி அமைப்பிலும் உள்ளார்.
இந்து முன்னணி தொடர்பாக மதுரவாயலில் நடந்த இந்து முன்னணி மாநாட்டில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளருமான கனல் கண்ணன் பேசிய போது, உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் பெரியார் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று பேசி இருந்தார்.
கனல் கண்ணனின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்தன. பெரியார் சிலை பற்றி அவதூறு பேசியதாக புகார் செய்யப்பட்டது. இந்த புகாரில் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டிச்சேரியில் தங்கியிருந்த கனல் கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கில் கனல் கண்ணனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நான்கு வாரங்களுக்கு காலை, மாலையில் இரண்டு வேளை விசாரணை அதிகாரிகளுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் , தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்த வழக்கில் , கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து ஐந்து மாதங்களான பின்னரும் கூட குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யவில்லை. அதனால் உடனடியாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர், கனல்கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.