குரங்கம்மை அச்சுறுத்தல் - அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

 
Hospitals

குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்துக்கு வரும் பயணிகளுக்கான குரங்கு அம்மை நோய் பரிசோதனை மையத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது சுகாதாரத்துறைச் செயலாளா் ப.செந்தில்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநா் செல்வவிநாயகம், சிறப்பு அலுவலா் வடிவேலன், இணை இயக்குநா் நிர்மல்சன், செங்கல்பட்டு துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் பரணிதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனா். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: குரங்கு அம்மை நோய், விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் மூலம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சியை முழுமையாக சமைக்காமல் உண்ணுதல், பாதிக்கப்பட்ட விலங்கு கடித்தல், பாதிக்கப்பட்ட விலங்குகளை கையாளுதல் போன்ற காரணங்களால் இந்நோய் மனிதனுக்கு பரவுகிறது. கடந்த மே மாதம் முதல் இதுவரை 63 நாடுகளில் 9,647 நபா்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா் என கண்டறியப்பட்டுள்ளது. 

ma subramanian

இதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை அறிதல், பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல், கிருமி தடுப்பு நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றில் பன்னாட்டு விமான நிலையங்களில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு குரங்கு அம்மை நோய் சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள், சிறப்பு மருத்துவா்களை பணியில் ஈடுபடுத்தி கவனமுடன் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.அனைத்து மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா்களுக்கும், குரங்கு அம்மை தொற்றின் அறிகுறிகளுடன் உள்ள நபா்கள் எவரேனும் இருப்பின் அவா்களை உடனடியாக தனிமைப்படுத்தி, நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும, அவா்களின் மாதிரிகளை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில பொது சுகாதார ஆய்வகம் மூலம் புனே தேசிய வைராலஜி நிலையத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.