வெளுத்து வாங்கப்போகும் மழை.. 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்..
தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் தெரிவிப்பதாவது: கடலோரப் பகுதியில் இருந்த வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேற்கு - வட மேற்கு நோக்கி நேற்று முன்தினம் இரவு நகரத் தொடங்கியதும், மேகத்துக்கு மேலே வெப்பம் உயர்ந்த காரணத்தால், குளிர் அலைகள் பின்னுக்கு தள்ளப்பட்டன. அதன் காரணமாக நேற்று காலையில் இருந்து பகல் முழுவதும் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்தது. இந்நிலையில், மேலும் அந்த வெப்பம் காரணமாக குளிர் அலைகள் மேலும் பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு ஏற்பட்டதால் ராணிப்பேட்டை முதல் தெற்கு ஆந்திரா வரை மழை நீடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
அத்துடன், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழை முதல் கனமழை பெய்யும். மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த பருவமழை 5ம் தேதி வரை தொடர்ந்து வட மாவட்டங்களில் பெய்யும் என்றும், பின்னர் 8ம் தேதி வரை தென் மாவட்டங்களில் பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 20 செமீ வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.