உண்மைத் தன்மையை விளக்கும் சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்குவேன்- ஓபிஎஸ்
உண்மைத் தன்மையினை விளக்கும் சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்குவேன் என ஓபன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது அன்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று இருந்தார் அப்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வன்முறையாக மாறியது.
பின்னர் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்தை சூறையாடியதாகவும் ஆவணங்களை திருடி சென்றதாகவும் இபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில் மோதல் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசனை நியமித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் சிபிசிஐடி அதிகாரிகள் முறையான விசாரணையை மேற்கொள்ளவில்லை என இபிஎஸ் தரப்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில் இன்றைய தினம் சிபிசிஐடி போலீசார் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல் சம்பவம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட மனமுறிவால், பொதுக்குழுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட அறிவுப்புகளை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனால் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த ஒ.பன்னீர்செல்வம் , மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் பெரியகுளம் திரும்பும் முன் மதுரை கோச்சடை பகுதியில் உள்ள திருமண மஹாலில் தனது ஆதரவாளர்களுடன் தேனீர் அருந்தியவாறு ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உண்மைத் தன்மையினை விளக்கும் சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்குவேன்" என தெரிவித்தார்