திமுக எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் - திமுக அறிவிப்பு

 
arivalayam

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் அக்கட்சியின் தலைமை கழகம் அறிவித்துள்ளது.   

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  அந்த அறிக்கையில், இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான ஒன்றிய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. 

cm letter

இந்நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் அக்கட்சியின் தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் இத்துடன், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 3-5-2022 அன்று வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தி.மு.கழகத்தின் பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை “முதலமைச்சர் பொது நிவாரண நிதி”க்கு வழங்கிடுவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.