அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 322 சிறைக்கைதிகள் விடுதலை..
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 322 சிறைகைதிகளை தமிழ்நாடு அரசு விடுதலை செய்துள்ளது.
தலைவர்களின் பிறந்தநாள்களில் நன்னடத்தை அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவது வழக்கம்.. அந்தவகையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 509 சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரைத்த நிலையில் 322 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். தமிழக அரசு பரிந்துரைத்த போதிலும், எஞ்சிய 187 கைதிகளை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துவிட்டார்.
7 பேர் விடுதலை விவகாரத்திலும் தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புட்தல் அளிக்காமல் கிடப்பில் போட்டதால், உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார். ஆளுநரின் செயல்படாத தன்மையை கண்டித்த உச்சநீதிமன்றம் தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தது. உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில் ஏற்கனவே 2021 செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அனுப்பிய கோப்புகள் மீது படிப்படியாக ஆளுநர் முடிவு எடுத்து வருகின்றார். மேலும், 187 பேர் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழக அரசு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.